கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!

இவ்வளவு சூப்பரான ஒரு ஆட்டத்தைப் பார்த்து விட்டு (டை ஆன இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம்), அதைப் பற்றியே கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருப்பது என்பது இயல்பானதே. குறைந்த பட்சம் அடுத்த ஆட்டம் பார்க்கும் வரையாவது இது நீடிக்கும். கிரிக்கெட் என்பதே அதுதானே?! ஒரு நாள் முழுக்கப் பார்ப்பதில் வீணாக்குவது; அதன் பின்னர் பல நாட்களை அதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவதில் வீணாக்குவது. 

ஒரே ஆட்டத்தில் ஒரே நாளில் 676 ஓட்டங்கள் அடிப்பதைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்த போதும், தொலை நோக்கில் அதுதான் இந்த விளையாட்டைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆட்களை ஈர்க்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்த விளையாட்டையும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் T20 வந்த பிறகு இன்னும் கூடுதலாகி விட்டது. எல்லா நாடுகளிலுமே பந்து வீச்சாளர்கள் ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் என்னும் படிவம் உண்மையான கிரிக்கெட்டை - அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொன்று கொண்டிருக்கிறது என்பதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தேன். இன்று, புதிதாக ஒரு படிவம் வந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு படிவங்களையுமே கொன்று கொண்டிருக்கிறது. இது விளையாட்டுக்கு நல்லதா? இல்லை, நல்லதில்லை - டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் பார்ப்போரின் எண்ணிக்கைக் குறைவை வைத்துப் பார்த்தால் விளையாட்டுக்கு அது நல்லதில்லை. நமக்கு நல்லதா? ஆம். நல்லதே - டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதில் வீணாக்கிய நம் நேரம் மிச்சமாவதை வைத்துப் பார்த்தால் நமக்கு அது நல்லதே.

சரி, இன்றைய ஆட்டத்துக்கு வருவோம். இன்று நான் கண்ட மிகப் பெரும் பிரச்சனை பிட்ச். அது எப்போதுமே இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பிரச்சனையாகத்தான் இருந்திருக்கிறது. நல்ல வேளையாக, இந்த ஆட்டம் டை ஆனதால் அது பற்றிப் பேசலாம். இல்லாவிட்டால், சாக்குச் சொல்வதாக என்னைத் திட்டித் தீர்ப்பார்கள் (நாம் தோற்றிருந்தால்) அல்லது வென்ற அணியின் திறமையைக் கொச்சைப் படுத்துவதாகத் திட்டியிருப்பார்கள் (நாம் வென்றிருந்தால்).

பிட்ச் நிலவரம் அல்லது டாஸ் தோற்பது காரணமாகப் பல நேரங்களில் நல்ல அணிகள் அவர்களை விட ஒப்பேறாத அணிகளிடம் தோற்பதைக் கண்டிருக்கிறேன், முக்கியமாகத் துணைக் கண்ட மைதானங்களில். சில நேரங்களில், துணைக் கண்ட மைதானங்களில் பகல்-இரவு ஆட்டங்களையே தடை செய்ய வேண்டுமோ என நினைப்பேன். மற்ற பகுதிகளை விட, இங்குதான் பிட்சும் டாசும் ஆடுபவர்களை விட முக்கியப் பங்காற்றுகின்றன. ஆட்டத்தின் முடிவை பிட்சா டாசோ முடிவு செய்வதாக இருந்தால் திறமைக்கு அங்கே என்ன மரியாதை?

பிட்ச்களுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க தரம் என்று ஒன்று வரையறுக்கப் பட வேண்டும். கொஞ்ச காலம் முன், நம் காலத்தின் முக்கியமான புத்திசாலிக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி, செயற்கை விரிப்புகள் பிட்ச்களாக உபயோகப் படுத்தப் பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் மற்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால் அது ஒரு நல்ல சிந்தனையாகப் படுகிறது. இரு அணிகளுமே ஒரே பிட்சில் விளையாடுமே. அதன் பின்பும் ஈரப்பதம் போன்ற அம்சங்கள் அவற்றின் வேலையைச் செய்யத்தான் செய்யும்.

கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதற்கு இருக்கிற நாடுகளிலேயே விளங்காத நாடு இலங்கைதான். நல்ல தெம்பு இருக்கிற - சராசரிக்கும் கீழான ஆட்டத் திறமை கொண்ட ஒருவர் நல்ல பவுலிங் அணிகளுக்கு எதிராக மிக எளிதாக இரட்டை சதங்களும் முச்சதங்களும் அடிப்பார். இந்தப் பிரச்சனை T20-இல் இல்லாத ஒன்று. T20 பிரபலம் அடைய வேண்டியதற்கு இன்னொரு காரணம்!

சிறந்த அணி என்றால் அது எந்தச் சூழ்நிலையிலும் வெல்ல வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அந்த வரையறைப் படி பார்த்தால், சிறந்த அணி என்று ஒன்று இரவே இராது. ஆஸ்திரேலிய அணி வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது கூட இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. அதன் பொருள், நாம் அவர்களை விட சிறந்த அணி என்றாகி விடுமா? சுத்தப் பேத்தல்! நடத்துபவர்கள் எல்லா அணிகளுக்குமே சமமான வாய்ப்புகளையும் சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 'சிறந்த அணி' என்றால் என்ன என்கிற வரையறைகள் செய்ய வேண்டியது அரைவேக்காட்டுப் பார்வையாளர்களின் வேலை.

சொந்த மண்ணில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று விட்டு வெளியூரில் போய் இன்னிங்க்ஸ் + நூற்றுக் கணக்கான ஓட்டங்களில் தோல்வி அடையும்போது எனக்கு மண்டை காயும். அதற்குக் காரணம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற மாதிரி நாம் காலம் காலமாகத் தயாரித்துக் கொண்டிருக்கும் சொத்தைப் பிட்ச்களே. வேகப் பந்து வீச்சுக்கேற்ற பிட்ச்களுக்கு நாம் பழக்கப் படும் வரை அத்தகைய பிட்ச்களில் சர்வதேசப் போட்டிகள் ஆடுவது தப்பில்லை. ஏனென்றால், அதுதான் நம் பலம். ஆனால், ஆரம்பத்தில், உள்ளூர்ப் போட்டிகளுக்காவது புற்கள் நிறைந்த வேகப் பந்துவீச்சுக்கேற்ற பிட்ச்களைத் தயாரிக்க வேண்டும். வெளியில் செல்லும்போது சந்திக்கும் கடினமான சவால்களை எளிதாகச் சமாளிக்க அது உதவும்.

இத்தோடு சேர்த்து, எனக்கு எப்போதுமே சௌகர்யம் இல்லாத ஆட்டத்தின் மற்ற பல அம்சங்கள் பற்றியும் நினைவுக்கு வருகிறது. அதில் ஒன்று கேப்டனுக்குத் தரப் படும் முக்கியத்துவம். ஒரு முக்கியமான தொடரையோ இரண்டு-மூன்று தொடர்களை வரிசையாகவோ நாம் சொதப்பி விட்டால், உடனடியாகக் கேப்டனை வீட்டுக்கனுப்பி விட்டு, அதற்கு் கொஞ்சமும் தகுதியில்லாத வேறொருவரைக் கூப்பிட்டு அந்தப் பதவியைக் கொடுத்து விடுவோம். அதில் அர்த்தமேதும் இருக்கிறதா உண்மையிலேயே?

அணியை வழி நடத்தச் சிறந்த ஆள் இவர்தான் என்று ஒருவரை அடையாளம் கண்டு விட்டால், அதைவிடச் சிறந்த ஒருவரை அடையாளம் காணும் வரை அவரை மாற்றக் கூடாது. இல்லையேல், நாம் சரியான ஆளை அடையாளம் காணவில்லை அல்லது அதை எப்படிச் செய்வதென்று தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் நாம் கேப்டனை மாற்றிக் கொண்டே இருந்தோம் என நினைக்கிறேன். அந்த வகையில், நாம் பாகிஸ்தானை விடப் பரவாயில்லை. மகிழ்ச்சிப் படுகிற மாதிரி ஒரு விஷயம்!

உலகக் கோப்பையை வென்று கொடுத்தார் என்றபோதும், கவாஸ்கர் இருந்த அணியில் கபில்தேவ் கேப்டனாக இருந்ததை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதுபோலவே, கபில்தேவ் இருந்தபோது அசாருதீன் கேப்டனாக இருந்ததும் அசாருதீன் காலத்தில் டெண்டுல்கர் இருந்ததும் அப்படிப் பட்ட மற்றும் பல நியமிப்புகளும் எனக்கு உடன்பாடில்லாதவை. நான் எப்போதுமே நினைத்தது என்னவென்றால், அந்த வரிசை இப்படி இருந்திருக்க வேண்டும் - கவாஸ்கர் > கபில்தேவ் > சாஸ்திரி > அசாருதீன் > கும்ப்ளே > டெண்டுல்கர்.

கவாஸ்கர் நிறைய ஆட்டங்கள் வென்றதில்லை என்பதற்காக அவருடைய தலைமைப் பண்புகளையோ விளையாட்டில் அவருக்கிருக்கும் ஞானம் பற்றியோ கேள்வி எழுப்ப முடியாது. ஒரு அணி அந்த அணியின் அளவுக்கு பலமாக இருக்குமே ஒழிய கேப்டனின் அளவுக்கு அல்ல. அதனால்தான் அது ஒரு அணி விளையாட்டாக இருக்கிறது. கேப்டனின் திறமைக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால், நாம் நம்ப வைக்கப் பட்ட அளவுக்கு அல்ல.

ரிக்கி பாண்டிங்கை ஒரு கேப்டனாகப் பார்ப்பதைக் காணவே கடுப்படிக்கும். அவருக்கு இருக்கும் தலைமைப் பண்பின் அளவு சைபர் (அல்லது அதற்கும் கீழ்). விளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உணர்வு என்பது சற்றும் இல்லாத பீத்தக் கேஸ். அதை உணர்வதற்கு உலகுக்குப் பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகியிருக்கிறது. ஷேன் வார்ன் தான் ஸ்டீவ் வாவுக்குப் பிறகு சரியான ஆள் என்பது என் எண்ணம். ஆனால், அவருக்கே அவருக்கென்று பல சர்ச்சைகள் இருந்தன சமாளிக்க. இருப்பதிலேயே பலவீனமான அணியை ஐ.பி.எல்-1 இல் கோப்பை வெல்ல வைத்து கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் அவருடைய திறமையை உலகுக்குக் காட்டி விட்டார்.

அடுத்து, இந்தியக் கிரிக்கெட்டில் எனக்குப் பிடிக்காத இன்னொன்று - நம் உள்நாட்டுப் போட்டிகளின் படிவம். நாம் அதிகம் வெல்ல ஆரம்பித்து விட்டதால் யாரும் அது பற்றி அதிகம் பேசுவதில்லை இப்போது. திரும்பவும் நாம் தோற்க ஆரம்பிக்கும்போது மீண்டும் விவாதத்துக்கு வரும். வென்றாலும் தோற்றாலும் - நம் பிரச்சனைகள் நம் பிரச்சனைகளே, பலங்கள் பலங்களே, தலைவர்கள் தலைவர்களே. நல்லது கேட்டது பற்றி அலசி ஆயும்போது என்ன சாதித்தோம் என்பது கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். ஆனால், காலமெலாம் உலகை ஆள விரும்பினால், முடிவுகளை மட்டுமல்லாது மற்ற அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ரஞ்சிக் கோப்பை நம் திறமைகளைச் சீரழித்து விட்டது என்று உறுதியாக நம்புகிறேன். கோவாவுக்கும் பாண்டிச்சேரிக்கும் எதிராக முச்சதங்கள் அடிப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஆஸ்திரேலியாவில் போல ஐந்து அல்லது ஆறு அணிகள் தான் இருக்க வேண்டும். அதுதான் முதல்தரக் கிரிக்கெட்டில் ஆடப் படும் ஆட்டங்களின் தரத்தை மேம்படுத்தும். அதுவே தேசிய அணிக்கும் மேம்பட்ட வழிகளில் நிறையப் பங்களிக்கும்.

அடுத்து, எல்.பி.டபுள்யூ. ஏகப் பட்ட சிக்கல்களை உண்டு பண்ணும் - கிரிக்கெட்டில் உள்ள மிகப் பெரிய குழப்பம். ஒருவர் உண்மையிலேயே அவுட்டா இல்லையா என்பதைத் துல்லியமாகச் சொல்ல துளியும் பிசிறில்லாத ஒரு முறை இல்லை இப்போதைக்கு. இது தவறான முடிவுகளுக்கு அளவிலாத இடம் அளிப்பது மட்டுமல்லாமல் நடுவர்களை மித மிஞ்சிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறியுள்ள காலத்தில் அதை முடிந்த அளவு சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நிறையப் பேர் நிறையச் சப்தம் எழுப்புகிறார்கள். எனக்கு அது புரியே மாட்டேன் என்கிறது. மனித அம்சத்தை விளையாட்டை விட்டு நீக்க விரும்பவில்லையாம். சரி. ஒத்துக் கொள்கிறோம். ஆனால், மேம்பட்ட முடிவுகள் எடுக்கவும் தவறுகளைத் தவிர்க்கவும் அது பயன்படுமானால் அதில் என்ன தப்பிருக்கிறது?

இந்த உலக கோப்பையில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் நடுவர் முடிவை மறுபரிசீலிக்கும் முறை (UDRS) நன்றாக உள்ளது. ஆனால், அதுவே மிகச் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. அது நடுவர்களை மட்டம் தட்டி விடுகிறது என்கிறார்கள். அதுவும் சரிதான். அப்படியானால், பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன? முன்பு, கொஞ்ச காலம், எல்.பி.டபுல்யூவுக்கும் நடுவர்கள் மூன்றாவது நடுவரை நாடலாம் என்றிருந்தது. அதில் என்ன கோளாறு கண்டார்கள் என்று தெரியவில்லை. ஏதோவொரு காரணத்துக்காக அதுவும் நீக்கப் பட்டு விட்டது.

அடுத்து, அணிகளைக் குழுக்களாகப் பிரித்து ஏகப்பட்ட சோப்ளாங்கி நாடுகளைக் கொண்டு வந்து போட்டு (விளையாட்டைப் பிரபலம் ஆக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு) உலகக் கோப்பையின் படிவமே அர்த்தமற்றதாக இருக்கிறது பெரும்பாலும். கபில்தேவின் 175-ம் விவியன் ரிச்சர்ட்சின் 189-ம், இன்று உலகக் கோப்பைக்கு வந்து கிரிக்கெட் பழகும் அணிகளுக்கு எதிராக செத்த பிட்ச்களில் அடிக்கப் படும் பெரும் எண்ணிக்கைகளோடு ஒப்பிடவே முடியாதவை. அடுத்த உலகக் கோப்பையில் இருந்தாவது கொஞ்சம் புத்திசாலித்தனம் தலையெடுத்தால் நல்லது.

92-இல் ஆடிய படிவம்தான் சிறந்தது என்பேன். எல்லா அணிகளும் (ஒன்பது மட்டுமே, அதுவும் ஜிம்பாப்வே தவிர்த்து எட்டாக இருந்திருக்க வேண்டும்) எல்லா அணிகளுக்கும் எதிராக முதல் சுற்றில் ஆடி, பின்னர் நான்கு சிறந்த அணிகள் நாக்-அவுட்டில் சந்திப்பது. அதிர்ஷ்டம் மிகச் சிறிய பங்கே ஆற்றியது (அது வேறொரு விதத்தில் தென் ஆப்பிரிக்காவை வெளியில் அனுப்பி வேலையைக் காண்பித்தது, கோப்பையை வெல்லும் என்று எதிர் பார்த்த ஆஸ்திரேலியா அரையிறுதியிலேயே வெளியேறியது, எப்போது எப்படி ஆடுவார்கள் என்று எதிர் பார்க்கவே முடியாத - ஆனாலும் திறமைப் படி பார்த்தால் எந்த நேரத்திலும் தலை சிறந்த அணிகளில் ஒன்றாக வரும் பாகிஸ்தான் கோப்பையை வென்றது என்ற போதும்).

நான்கு குழுக்களும் காலிருதியும் கொண்டு இருந்த 2007 தான் ஆகப் படு மோசம். இந்தியாவின் இடத்தில் வங்க தேசம் இருந்தது கேலிக்கூத்து. வங்க தேசம் அளவுக்கு இந்தியா அன்றைய ஆட்டத்தில் நன்றாக ஆடவில்லை, அதனால் வங்க தேசம் உள்ளே சென்றது என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். மோதிய இருபத்தி இரண்டு முறைகளில் இருபது முறை தோற்ற அணி தகுதி பெறுவதும் வென்ற அணி வெளியில் அனுப்பப் படுவதும் படிவத்தில் உள்ள கோளாறு என்றே சொல்வேன்.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு மோசமான நாள் இருக்கும். அத்தகைய மோசமான நாட்கள் உலகக் கோப்பை போன்ற ஒரு மிகப் பெரிய நிகழ்வில் அணிகளின் மொத்த விதியையும் தீர்மானிக்கக் கூடாது. 83-இலும் கூட மேற்கிந்தியத் தீவுகளின் அது போன்ற ஒரு மோசமான நாள்தான் நாம் கோப்பை வெல்ல உதவியது. அது முடிந்தவுடன் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா வந்த தொடரில் அது நிரூபிக்கப் பட்டது. வந்து நம்மை நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து விட்டார்கள்! மூன்று ஆட்டங்கள் கொண்ட இறுதிப் போட்டிகள் இதற்குத் தீர்வாகலாம். ஆனால், அது விளையாட்டில் இருக்கும் பரபரப்பையும் வேடிக்கைத் தன்மையையும் குறைத்து விடலாம்.

அது போன்ற வியப்புகளும் அதிர்ச்சிகளும் தான் இந்த விளையாட்டை மென்மேலும் சுவாரசியமானதாக ஆக்குகின்றன என்பதை நானும் உணர்கிறேன். ஆனால், கொல்லப்படுவது திறமையும் திறமைசாலிகளின் தன்னம்பிக்கையும். உங்கள் அபிப்ராயம் நீங்கள் இந்த விளையாட்டில் இருந்து என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து மாறலாம் - வேடிக்கையா விதிமுறைகளா என்பதைப் பொருத்து. விதி முறைகள் விளையாட்டிலும் முக்கியம் என நினைக்கிறேன். ஏனென்றால், அதில் அளவிலாத பணமும் மக்களின் நேரமும் இருக்கிறது. அது மட்டுமில்லை, விளையாட்டுகள் வேறு பட்ட நாட்டினருக்கும் பண்பாட்டவருக்கும் மத்தியில் நாம் நினைப்பதை விடப் பெரும் பங்காற்ற வேண்டியவை. அதிலிருந்தே தெரிய வேண்டும் - நடத்துபவர்கள் இவ்வாட்டங்களை எவ்வளவு முறையாக நடத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்பது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி